திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.93 திருஅம்பர்மாகாளம் பண் - சாதாரி |
படியுளார் விடையினர் பாய்புலித் தோலினர் பாவநாசர்
பொடிகொள்மா மேனியர் பூதமார் படையினர் பூணநூலர்
கடிகொள்மா மலரிடும் அடியினர் பிடிநடை மங்கையொடும்
அடிகளார் அருள்புரிந் திருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
|
1 |
கையின்மா மழுவினர் கடுவிடம் உண்டஎங் காளகண்டர்
செய்யமா மேனியர் ஊனமர் உடைதலைப் பலிதிரிவார்
வையமார் பொதுவினில் மறையவர் தொழுதெழ நடமதாடும்
ஐயன்மா தேவியோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
|
2 |
பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவிலார்பால்
கரவினர் கனலன வுருவினர் படுதலைப் பலிகொடேகும்
இரவினர் பகலெரி கானிடை யாடிய வேடர்பூணும்
அரவினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
|
3 |
நீற்றினர் நீண்டவார் சடையினர் படையினர் நிமலர்வெள்ளை
ஏற்றினர் எரிபுரி கரத்தினர் புரத்துளார் உயிரைவவ்வுங்
கூற்றினர் கொடியிடை முனிவுற நனிவருங் குலவுகங்கை
ஆற்றினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
|
4 |
புறத்தினர் அகத்துளர் போற்றிநின் றழுதெழும் அன்பர்சிந்தைத்
திறத்தினர் அறிவிலாச் செதுமதித் தக்கன்றன் வேள்விசெற்ற
மறத்தினர் மாதவர் நால்வருக் காலின்கீழ் அருள்புரிந்த
அறத்தினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
|
5 |
பழகமா மலர்பறித் திண்டை கொண் டிறைஞ்சுவார் பாற்செறிந்த
குழகனார் குணம்புகழ்ந் தேத்துவா ரவர்பலர் கூடநின்ற
கழகனார் கரியுரித் தாடுகங் காளர்நங் காளியேத்தும்
அழகனார் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
|
6 |
சங்கவார் குழையினர் தழலன வுருவினர் தமதருளே
எங்குமா யிருந்தவர் அருந்தவ முனிவருக் களித்துகந்தார்
பொங்குமா புனல்பரந் தரிசிலின் வடகரை திருத்தம்பேணி
அங்கமா றோதுவார் இருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
|
7 |
பொருசிலை மதனனைப் பொடிபட விழித்தவர் பொழிலிலங்கைக்
குரிசிலைக் குலவரைக் கீழுற அடர்த்தவர் கோயில்கூறிற்
பெருசிலை நலமணி பீலியோ டேலமும் பெருகநுந்தும்
அரசிலின் வடகரை அழகமர் அம்பர்மா காளந்தானே.
|
8 |
வரியரா அதன்மிசைத் துயின்றவன் தானுமா மலருளானும்
எரியரா அணிகழ லேத்தவொண் ணாவகை யுயர்ந்துபின்னும்
பிரியராம் அடியவர்க் கணியராய்ப் பணிவிலா தவருக்கென்றும்
அரியராய் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
|
9 |
சாக்கியக் கயவர்வன் றலைபறிக் கையரும் பொய்யினால்நூல்
ஆக்கிய மொழியவை பிழையவை யாதலில் வழிபடுவீர்
வீக்கிய அரவுடைக் கச்சையா னிச்சையா னவர்கட்கெல்லாம்
ஆக்கிய அரனுறை அம்பர்மா காளமே யடைமின்நீரே.
|
10 |
செம்பொன்மா மணிகொழித் தெழுதிரை வருபுனல் அரிசில்சூழ்ந்த
அம்பர்மா காளமே கோயிலா அணங்கினோ டிருந்தகோனைக்
(*)கம்பினார் நெடுமதிற் காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன
நம்பிநாள் மொழிபவர்க் கில்லையாம் வினைநலம் பெறுவர்தாமே.
(*) கம்பினார் நெடுமதில் என்பது ஆகாயம் பின்னிடும்படி மேலோங்கிய மதிலெனப் பொருள்படுகின்றது. கம் என்பது ஆகாயம்.
|
11 |
திருச்சிற்றம்பலம் |